சக்குபாய்
மஹாராஷ்டிரா மாநிலம் பந்தர்பூரில் ஒரு ஏழை தம்பதியர் வாழ்ந்து
வந்தார்கள். அவர்கள் தங்கள் இரக்க குணத்தாலும் மற்றவர்களுக்கு உதவும் பண்பாலும்
அந்த ஊர் மக்களின் இதயங்களில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பாண்டுரங்க விட்டாலாவின்
தீவிர பக்தர்கள். அவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும், அவர்களுக்கு பிள்ளையில்லாதது
பெருங்குறையாக இருந்தது. வெகு விரைவில் இறைவன் அவர்கள் குறையை தீர்த்துவைத்தான்.
அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சக்குபாய் என்று
பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தார்கள்.
சக்குபாய்
அழகான மற்றவர்கள் போற்றும்படியான பெண்ணாக வளர்ந்து வந்தாள். அவளுக்கு பாண்டுரங்கன்
மீது மிகுந்த பக்தி இருந்தது. வீட்டில் தாயாருக்கு எல்லா வேலைகளிலும் மிகவும்
உதவியாக இருந்தாள். சக்குபாய் நல்ல குணத்துடன், மற்றவர்களுக்கு எந்தவித தீங்கும்
நினைக்காத, கடுஞ்சொல்
பேசாத பெண்ணாக வளர்ந்து வந்தாள்.
கிருஷ்ணா
நதிக்கரையில் கரவீரபுரம் என்ற அழகிய கிராமம் பச்சை பசேலென்று, அழகிய நந்தவனங்களுடன் இருந்தது.
அந்த கிராமம் பல்வேறு ஜாதி இன மக்களைக் கொண்டதாக இருந்தாலும் அவர்கள் ஒற்றுமையுடன்
வாழ்ந்து வந்தார்கள். அந்த கிராமத்தில் புராண இதிகாசங்களில் சிறந்த வசதியுள்ள ஒரு
பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் எச்சில் கையால் காக்கை ஓட்டாத ஒரு மகா கஞ்சர்.
எனவே மக்கள் அவரை "குருப்பனரயா" ( மகா கஞ்சன் என்று பொருள்) என்று
அழைத்து வந்தனர். அவர் மனைவி கயலிபாய் துர்குணம் மிக்கவள். மற்றவர்களுடன்
எப்போதும் சண்டை பிடிப்பவளாகவும், துன்புறுத்துபவளாகவும், உதவும் குணமற்றவளாகவும்
இருந்தாள்.
இவர்களுக்கு
ஓடுரயா என்ற பெயருடைய ஒரு மகன் இருந்தான். மகனோ தந்தையோ கயலிபாயை எதிர்த்து ஒரு
வார்த்தை பேசாத மனோபாவம் கொண்டவர்களாக இருந்தனர். தன் மகனுக்கு வேத பாடங்களை
தந்தையார் சொல்லிக்கொடுத்தார். ஆனால் ஓடுரயா தாய் தந்தையரின் குணங்களைக்கொண்டு
கஞ்சனாகவும் துர்குணங்களைக் கொண்டவனாகவும் வளர்ந்து வந்தான்.
துர்குணங்களைக்கொண்ட
அவனுக்கு யாரும் அந்த கிராமத்தில் பெண் கொடுக்க முன் வரவில்லை. எனவே அவனுக்கு பெண்
தேடி அண்டை கிராமங்களுக்கு அவன் தந்தை சென்றார். அவ்வாறு செல்லும் போது
குருப்பனரயா பந்தர்பூர் கிராமத்திற்கு வர நேர்ந்தது. அங்கு அவர் சக்குபாயின்
குடும்பத்தை சந்தித்தார். சக்குபாயின் குண நலங்களைப் பார்த்து அவளை எப்படியாவது
தன் மருமகளாக ஆக்கிக் கொள்ளவேண்டுமென விரும்பினார். தன் விருப்பத்தை சக்குபாயின்
தந்தையிடம் தெரிவித்தார்.
குருப்பனரயா ஒரு பெருஞ் செல்வந்தர் என்று சக்குபாயின் தந்தைக்குத் தெரியும். ஆனால் அவர் மற்றும் அவர் குடும்பத்தாரின் துர்குணங்களைப் பற்றித் தெரியாது. அதை அறியாத சக்குபாயின் தந்தை, தன் மகளுக்கு இதைவிட வசதியான
இடத்தில் வரன் கிடைக்காது என்று நினைத்து சக்குபாயை ஓடுரயாவுக்கு திருமணம் செய்து
கொடுக்க சம்மதித்தார்.மேலும் பாண்டுரங்கனின் ஆசிர்வாதத்தாலேயே இந்த வரன் அமைந்ததாக
நினைத்தார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டது. குருப்னாராயன் குடும்பம் ஏழை
பிராமணரின் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. மணமகனின் தாய் சக்குபாய்க்கு சில தங்க
நகைகளைப் பரிசளித்தாள். மற்றும் சக்குபாயின் குடும்பத்திற்கும் சில பரிசுகளைக்
கொடுத்தாள். சக்குபாயின் தந்தை தன்னால் முடிந்த அளவுக்கு திருமணத்தைச் சிறப்பாக
நடத்தினார். திருமணம் ஐந்து நாட்களுக்கு நடந்தது சக்குபாயின் பெற்றோர் தாங்கள்
மிகுந்த அதிர்ஷ்டசாலி என்று நினைத்தனர். மணமகனின் குடும்பத்தினரின் துர்குணங்களைப்
பற்றி சக்குபாயின் பெற்றோர் அறிந்திருக்கவில்லை.
பன்னிரெண்டு வயதிலேயே திருமணமான சக்குபாய் தன் புகுந்த வீட்டிற்குச்
சென்றாள். அவள் பெற்றோர் இன்னும் சில தினங்களுக்கு தம்பதியர் தன் வீட்டில் இருந்து
செல்லலாம் என்று வேண்டியும் குருப்நாராய குடும்பத்தினர் மறுத்து தங்கள் மருமகளைத்
தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர்.
கிருஷ்ணர் மீது ஒரு சுலோகத்தை ஒரு முனிவர் அவள் இள வயதில் சொல்லிக்
கொடுத்து இருந்தார். அந்த சுலோகத்தைச் சக்குபாய் புகுந்த வீட்டில் அடிக்கடி
உச்சரித்துக் கொண்டிருந்தாள்.
புகுந்த வீட்டில் மாமியார் கொடுமை சக்குபாயிக்கு மிக அதிகமாக
இருந்தது. ஏராளமான வேலைகளைச் செய்யச்சொல்லி மாமியார் சக்குபாயைத் துன்புறுத்தி
வந்தாள். ஆனால் அத்ற்கு தகுந்தாற் போல் உண்வு அளிக்கப்படவில்லை. மிகச்சிறிதளவே
உணவு அளிக்கப்பட்டது. அதுவும் ஈ எறும்பு மொய்த்த பண்டங்களாகவே இருந்தன. மிக
அதிகமாக உணவு தானியங்கள் அரைக்கச் சொல்லி துன்புறுத்தப்பட்டாள். ஏகப்பட்ட சாமான்கள் கழுவச் சொல்லப்பட்டன. தேவைக்கு அதிகமாக நீர் இரைக்கும் வேலை இருந்தது. நெல் குத்தும் வேலை அதிகமாக
இருந்தது. எவ்வளவு வேலைகள் செய்தாலும் சக்குபாயால் தன் மாமியாரை திருப்தி படுத்த முடியவில்லை. ஏதாவது சொல்லி மருமகளைத் திட்டிக் கொண்டிருப்பதே மாமியாரின் பொழுது போக்காக இருந்தது. பல தினங்கள் சக்குபாய்க்கு உணவே அளிக்கப்படவில்லை.
இந்நிலையில்
சக்குபாயின் பெற்றோர் தங்கள் மகளைக் காண வந்தனர். வந்த இடத்தில் சக்குபாயின்
கோலத்தைக்கண்டு மிகவும் வருந்தினர். சக்குபாய் மிகவும் இளைத்து காணப்பட்டாள். அவள்
கந்தல் ஆடைகளை அணிந்திருந்தாள். அவள் தலைமுடி எண்ணெய் காணாததால் வறண்டு இருந்தது.
சக்குபாய் தன் பெற்றோரை வரவேற்க கூட அனுமதிக்கப்படவில்லை.
அந்த
கிராமத்தில் இருந்தவர்கள் சக்குபாயின் பெற்றோரிடம் அவர்களின் ஊரில் பாழுங்கிணறு
எதுவும் இல்லையா, அதில்
உங்கள் மகளை தள்ளியிருக்கலாமே இந்த குடும்பத்தில் போய் சம்மந்தம்
வைத்துக்கொண்டீர்களே, என்று
கேட்டார்கள்.
சக்குபாயின்
பெற்றோர் அவளைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்ல விரும்பினார்கள். சக்குபாயின் புகுந்தவீட்டார் அதற்கு சம்மதிக்காததால் கடவுள் விட்ட வழி என்று நினைத்து சக்குபாயிடம் பாண்டுரங்க விட்டாலாவின் சிலை ஒன்றைக் கொடுத்து அதை வணங்கி வருமாறும் அவர் உனக்கு நல்ல வழி காட்டுவார் என்று
கூறிவிட்டு சென்று விட்டார்கள். பெற்றோர் வீட்டு கதவும் அடைபட்டு விட்டதால் இருந்த
கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் சக்குபாய்க்கு போய்விட்டது. பாண்டுரங்க விட்டாலாவை
நினைத்து அவரை வழிபட்டு தன் குறைகளைக் கூறி வந்தாள். அவள் இருந்த நிலையில் வேறு
யாராவது இருந்திருந்தால் நிச்சயம் இறந்து விட்டிருப்பார்கள்.
தன்
பெற்றோர் கொடுத்துவிட்டு சென்ற சிலையை கூட சக்கு தன் சேலையில் மறைத்து வைத்துக்
கொண்டு சுலோகங்கள் சொல்லி வழிபட வேண்டியதாகப் போய்விட்டது. அது கூட நீண்ட நாள்
நிலைக்கவில்லை. சந்தேகம் கொண்ட மாமியார் ஒரு நாள் அந்த சிலையை சக்குவின்
வேண்டுகோளையும் கதறலையும் மீறிப் பிடுங்கி தூர எறிந்துவிட்டாள்.
இருந்தாலும்
சக்குபாயிக்குப் பாண்டுரங்க விட்டல மீது இருந்த இறைபக்தி கூடிக்கொண்டே வந்ததே தவிர
குறையவில்லை. அண்டை அயலார் அவள் மீது இரக்கம் கொண்டு பரிதாபப்பட்டனர். அவர்களிடம்
சக்குபாய் விட்டலதான் தனக்கு தாய் தந்தை எல்லாமும் அவர் தன்னை கவனித்துக்கொள்வார்
என்று கூறி வந்தாள்.
ஒரு நாள்
சக்குபாய் தன் அண்டை வீட்டுக்காரியான சாந்தாபாய் என்பவளுடன் கிருஷ்ணா நதிக்கரைக்கு
தண்ணீர் எடுத்துவரச் சென்றாள். அங்கு பந்தர்பூர் செல்லும் சாதுக்கள் சிலரை
சக்குபாய் காண நேரிட்டது. அவர்களுடன் பந்தர்பூர் சென்று பாண்டுரங்கனைத் தரிசிக்க
விருப்பினாள். உடன் வந்த சாந்தாபாய் வீட்டிற்குச் சென்று சக்குபாய்
யாத்திகர்களுடன் பந்தர்பூர் செல்ல இருப்பதை சக்குபாயின் புகுந்த வீட்டினரிடம்
கூறிவிட்டாள். அதை அறிந்த அவர்கள் கிருஷ்ணா நதிக்கரைக்கு வந்தனர். அங்கு சக்குபாய்
பாண்டுரங்க விட்டாலாவின் நாமத்தை உச்சரித்தபடி நடனமாடிக் கொண்டிருந்தாள். அதை கண்ட
சக்குபாயின் குடும்பத்தார் அவளை திட்டி வீட்டிற்கு இழுத்து வந்து ஒரு தூணில்
கட்டிப்போட்டனர்.
இது
எதுவும் சக்குபாயின் பாண்டுரங்க விட்டாலாவின் மீது இருந்த பக்தியை
அதிகப்படுத்தியதே தவிர குறைக்க முடியவில்லை. எந்நேரமும் பாண்டுரங்க விட்டாலாவின்
நாமத்தை உச்சரித்தபடியே இருந்தாள்.
அவள் வேண்டுகாள் வீண் போகவில்லை. ஒரு நாள் விட்டல பெண் வேடமிட்டு
சக்குபாய் முன் தோன்றினார். சக்கு நீ பாண்டுரங்கனை தரிசிப்பதிலேயே ஆர்வமாக இருப்பதால் நீ போய் அந்த யாத்திரிகர்களுடன் சேர்ந்து பந்தபூர் செல், உனக்கு பதில் உன் வீட்டு வேலைகளை
நான் செய்கிறேன், என்று கூறி
சக்குபாயின் கட்டுகளை அவிழ்த்து விட்டார். தன்னை அந்த தூணில் கட்டிக் கொண்டார்.
சக்குபாய் அந்த யாத்திரிகர்களுடன் சேர்ந்து பந்தர்பூர் புறப்பட்டாள்.
அந்த யாத்திரிகர்கள் சக்குபாய் முகத்தில் தெரிந்த ஒளியைக் கண்டு வியந்தனர். அவள்
ஒரு சாதாரண பெண் அல்ல, தெய்வீக
அம்சம் பொருந்திய பெண் என்று நம்பினர். நீ லஷ்மிதேவி கடவுளேதான், நீ விஷ்ணுவின் இதயத்தில் குடிகொண்டுள்ளாய், நீ வேண்டினால் பாண்டுரங்கன்
எங்களுக்குக் காட்சி தருவார், என்று சக்குபாயிடம் கூறிவிட்டு சக்குபாயுடன் சேர்ந்து அனைவரும்
பாண்டுரங்கனின் நாமத்தை கோஷமிட்டனர்.
பாண்டுரங்கன் சக்குபாயின் வேண்டுகோளுக்கு இணங்கி ருக்மணிதேவியுடன்
காட்சி அளித்தார். அந்த பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சக்குபாயிடம்
உன்னால்தான் இறைவன் எங்களுக்கு காட்சி அளித்தார் என்று கூறினர்.
அந்த சாதுக்கள் பாண்டுரங்கனின் நாமத்தை உச்சரித்தபடி
சக்குபாயுடன் தங்கள் யாத்திரையை த்தொடர்ந்து பந்தர்பூரை சென்று அடைந்தனர்.
சக்குபாய் சந்திரபாகா நதியில் நீராடி பாண்டுரங்கனை த்தரிசித்தாள்.
அதே வேளையில் சக்குபாயின் புகுந்த வீட்டில் சக்குபாய்
ரூபத்தில் இருந்த பாண்டுரங்கன் இன்னும் தூணில் கட்டப்பட்ட நிலையில் இருந்தார்.
சக்குபாயின் மாமனார் திடீரென்று இறைவன் கட்டளையால் பாண்டுரங்கன் கட்டுகளை
அவிழ்த்து விட்டார். பாண்டுரங்கன் அந்த வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்தார்.
பாத்திரங்கள் கழுவினார், துணிகள்
துவைத்தார், சமைத்தார்.
திடீரென அந்த குடும்பத்தார் இறைவன் அருளால் பூரண மனமாற்றம்
அடைந்தனர். அவர்கள் நடவடிக்கைகள் மாறின. யாரிடமும் கடுஞ்சொற்கள் பேசவில்லை.
மற்றவர்களுக்கு உதவ ஆரம்பித்தார்கள்.
அங்கே பந்தர்பூரில் இறைவனை வேண்டி அவன் காலடியில் கிடந்த
சக்குபாய் தன்னை இறைவனுடன் சேர்த்துக் கொள்ளுமாறு மனமுருகி வேண்டினாள்.
சக்குபாயின் வேண்டுகோளுக்கு இறைவன் செவி சாய்த்தார். சக்குபாயின் ஜீவாத்மா
பரமாத்மாவுடன் கலந்தது.
அவள் உடலை உடன் வந்த சாதுக்கள் சந்திரபாகா நதிக்கரையில்
எரியூட்டினர். அவள் இறந்த செய்தியை அவள் புகுந்த வீட்டிற்கு தெரிவிக்க அவர்களில்
ஒரு சாது புறப்பட்டு சென்றார்.
தன் கணவர் சக்குபாயின் வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பதை கருத்தில்
கொண்டு ருக்மணிதேவி மற்ற சாதுக்களின் கனவில் தோன்றி இறைவன் சக்குபாய்க்காக
சக்குபாயாக மாறி வேலை செய்து கொண்டிருக்கிறார், சக்குபாய் சென்றால்தான் அவர்
விடுதலை பெறுவார். எனவே சக்குபாயின் அஸ்தியை இங்கே கொண்டு வாருங்கள் என்று
கட்டளையிட்டாள். அவ்வாறே சக்குபாயின் அஸ்தியைத் தங்க கலசத்தில் வைத்து எடுத்து
வந்து ருக்மணி தேவியிடம் கொடுத்தார்கள். சக்குபாயின் அஸ்தியும் பாண்டுரங்கனின்
நாமத்தை உச்சரித்தபடியே இருந்தது. ருக்மணி அவர்கள் முன் காட்சியளித்து சக்குபாயின்
அஸ்திக்கு உயிர் கொடுத்தார்.
ருக்மணி
சக்குபாயை ஆசிர்வதித்து கரவீரபுரம் செல்லுமாறும் அங்கு அவளுக்காக வேலை
செய்துகொண்டிருக்கும் தன் கணவர் பாண்டுரங்கனை விடுவிக்குமாறும் கேட்டுக்கொண்டாள்.
அதன்படி சக்குபாய் கரவீரபுரம் சென்றாள். அங்கே நதிக்கரையில் தனக்காக தண்ணீர்
சுமந்து வரும் இறைவனைக் கண்டாள். அவர் காலடியில் விழுந்தாள். இறைவா நான் ஒரு பாவி
உங்களை என் வீட்டு வேலைகளை எல்லாம் செய்ய வைத்து விட்டேனே என்று கூறி க்கதறி
அழுதாள்.
இறைவன்
"கவலைப் படாதே உன் அதீத பக்தியே எம்மை உனக்காக வேலை செய்ய வைத்தது. நீ
நலமுடன் வாழ்வாய். உன் குடும்பத்தினர் உன்னால் என் தீவிர பக்தர்கள் ஆவார்கள்"
என்று கூறி ஆசிர்வதித்து விட்டு மறைந்தார்.
சக்குபாய் தண்ணீர் குடத்துடன் தன் வீட்டிற்குள் நுழைந்தாள். அதே
சமயம் சக்குபாய் இற்ந்துவிட்ட செய்தியை சொல்ல சாதுவும் வந்தார். அவர் கண்களை
அவரால் நம்ப முடியவில்லை. அந்த சாது பந்தர்பூரில் நடந்தவற்றை சக்குபாயின் குடும்பத்தினரிடம் விவரமாக
கூறினார்.
சக்குபாயின் புகுந்த வீட்டாரால் சக்குபாய் ரூபத்தில் பாண்டுரங்கன்
வீட்டு வேலைகள் செய்து வந்ததால் அதை நம்பவே முடியவில்லை. பின்னர் சக்குபாய்
பாண்டுரங்கன் அவள் கட்டுகளை அழித்து விடுவித்தது, அவளை பந்தர்பூர் செல்ல சொன்னது என
நடந்தவை அனைத்தையும் தன் புகுந்த வீட்டாரிடம் தெரிவித்தாள்.
சக்குபாயின்
குடும்பத்தார் அனைத்தும் கடவுளின் லீலைகள் என்று தெரிந்து கொண்டனர். சக்குபாயிடம்
தாங்கள் நடந்து கொண்ட விதத்திற்காக மன்னிப்புக் கோரினர். சக்குபாய் நீங்கள் எந்த
தப்பும் செய்யவில்லை, நீங்கள்
அவ்வாறு செய்யவில்லை என்றால் என்னால் பாண்டுரங்கனைத் தரிசித்திருக்க முடியாது
என்று கூறி பாண்டுரங்கனின் மகிமைகளை எடுத்துக் கூறினாள். எல்லோரையும் பந்தர்பூர் சென்று பாண்டுரங்கனைத் தரிசிக்குமாறு கூறி தானும் உடன் சென்றாள்.
பந்தர்பூரில்
பாண்டுரங்கனிடம் சக்குபாய் தன் குடும்பத்தார் செய்த தவறுகளை மன்னித்து அருள்
புரியுமாறு வேண்டிக்கொண்டாள். கடவுளும் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.
பின்னர்
அவர்கள் கரவீரபுரம் திரும்பி வந்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்தனர். சக்குபாயின்
பேரும் புகழும் எங்கும் பரவியது. அனேக சாதுக்கள் சக்குபாயிடம் வந்து கடவுள் அருள்
பெற்ற அவளிடம் ஆசி பெற்றுச் சென்றார்கள்.
முற்றிலும்
மாசுபட்ட சக்குபாயின் புகுந்த வீட்டாரின் குணம் மாறியது. சக்குபாய் தன் வாழ்நாள்
முழுவதும் பாண்டுரங்கனின் மகிமைகளை அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து அனைவரையும்
பாண்டுரங்கனின் பக்தர்களாக்கினாள். அடிக்கடி பந்தர்பூர் சென்று பாண்டுரங்க
விட்டாலாவை தரிசித்து வந்தாள்.
இவ்வாறு
வாழ்ந்து வந்த சக்குபாய் நீண்டகாலம் வாழ்ந்து வந்து இறப்பிற்குப் பின் மோட்சம் அடைந்து இறைவனுடன் இரண்டறக் கலந்தாள்.