தந்திர்வன் என்ற வனத்தில் ஜானுதேவ் சத்தியவதி என்ற தம்பதியர் வசித்து வந்தார்கள். அவர்கள் இருவரும் தீவிர கிருஷ்ண பக்தர்கள். அவர்களுக்கு புண்டலிக் என்ற மகன் ஒருவன் இருந்தான். தாய் தந்தையரை மிகவும் பாசத்துடன் கவனித்து வந்த அவனுடைய குணம் திருமணத்திற்கு பின் அப்படியே மாறிவிட்டது.
மனைவியுடன் சேர்ந்து தன் பெற்றோரை மிகவும் கொடுமைப் படுத்தினான். அவனுடைய கொடுமை தாங்காத அவன் பெற்றோர் காசிக்கு செல்ல முடிவெடுத்தனர்.
அவர்கள் திட்டத்தை அறிந்த புண்டலிக் தன் மனைவியுடன் காசிக்கு அவர்களுடன் செல்ல முடிவெடுத்தான். காசிக்கும் செல்லும் வழியெங்கும் ஜானுதேவ் சத்தியவதி தம்பதியருக்கு தங்கள் மகனின் கொடுமைகள் தொடர்ந்தன. மோசமான வானிலையில் பெற்றோர் நடந்து செல்ல மகனும் மருமகளும் குதிரையில் சென்றனர். புண்டலிக் இரவு தங்கும் இடங்களில் தன் பெற்றோரை குதிரையை கவனிக்கச் சொல்லியும் வேறு வேலைகள் இட்டும் கொடுமைப் படுத்தினான்.
இவ்வாறு அவர்கள் செல்லும் போது குக்குட் என்ற முனிவரின் ஆசிரமத்தின் அருகில் முகாமிட்டனர். குக்கிட் முனிவரிடம் புண்டலிக் காசிக்கு வழி கேட்டான். அதற்கு அவர் தனக்கு காசிக்கு வழி தெரியாது என்றும், தான் இதுவரை காசிக்கு சென்றதில்லை என்றும் கூறினார்.
அதைக் கேட்டு ஒரு ரிஷியாக இருந்தும் உங்களுக்கு காசிக்கு வழி தெரியவில்லையே என்று சிரித்தான். குக்குட் ரிஷி அவனுக்கு எந்த பதிலும் கூறாமல் பேசாமல் இருந்துவிட்டார்.
அன்று இரவு எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது புண்டலிக்குக்கு அதிகாலையில் திடீரென்று விழிப்பு வந்தது. அப்போது அழகிய பெண்கள் குழு ஒன்று அழுக்கான ஆடைகளுடன் குக்குட் ஆசிரமத்தினுள் நுழையக் கண்டான். அவர்கள் ஆசிரமத்தின் தரையை கழுவினர், குக்குட் முனிவரின் ஆடைகளைத் துவைத்தனர். பின்னர் பூஜை அறைக்குள் சென்றனர். திரும்பி வரும்போது அனைவரும் தூய ஆடைகளுடன் வெளிப்பட்டனர். பின்னர் வானத்தில் மறைந்து போனார்கள். அடுத்த நாள் இரவு அவர்கள் மீண்டும் வந்தனர். அப்போது புண்டலிக் அவர்கள் காலில் விழுந்து அவர்கள் யார் என்று வினவினான். அதற்கு அவர்கள் தாங்கள் 'கங்கை' 'யமுனை' போன்ற புண்ணிய நதிகள், பக்தர்கள் எங்களைப் போன்ற புண்ணிய நதிகளில் நீராடி தங்கள் பாவத்தைப் போக்குகின்றார்கள், நாங்கள் அந்த பாவங்களை, பெற்றோர்களுக்கு சேவை செய்வதில் சிறந்த குக்குட் முனிவருக்கு சேவை செய்வதன் மூலம் போக்கிக் கொள்கிறோம், என்றனர்.
மேலும் அவர்கள் புண்டலிக்கைப் பார்த்து நீ உன் தாய் தந்தையருக்கு கொடுமை செய்வதால் நீ ஒரு மகா பாவி என்று கூறிவிட்டு மறைந்தனர்.
புண்டலிக் தன் தாய் தந்தையருக்கு செய்த கொடுமைகளை எண்ணி மிகவும் வருந்தினான். அவனுள் மிகப்பெரிய மனமாற்றம் ஏற்பட்டது. தன் தாய் தந்தையர் மீது அளவற்ற பாசம் ஏற்பட்டது. மனம் திருந்திய அவன் தன் தாய் தந்தையரை காசிக்கு செல்ல வேண்டாம் தந்திர்வனத்திற்கே திரும்பி செல்லலாம் என்று வேண்டி கேட்டுக்கொண்டான். இந்த முறை தன் பெற்றோரை குதிரையின் மீதும் அவனும் அவன் மனைவியும் நடந்து தந்திர்வனம் திரும்பினர்.
அதே சமயம் துவாரகையில் தனிமையில் இருந்த கிருஷ்ணர் தான் மதுராவில் ராதையுடன் இருந்த நாட்களை எண்ணிப்பார்த்தார். ராதை இறந்து விட்டதால், அவளை பார்க்க விரும்பி ராதையை தன் தெய்வீக பலத்தால் மீண்டும் படைத்து தன் அருகாமையில் அமர்த்திக் கொள்கிறார். அப்போது அங்கு வந்த ருக்மணிக்கு ராதை உரிய மரியாதை செலுத்தாததால் ருக்மணி கோபித்துக்கொண்டு தந்திர்வன் காட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்கிறாள். ருக்மணியை தேடி தந்திர்வன் காட்டுக்கு கிருஷ்ணர் வந்து அவளை சமாதானப்படுத்துகிறார்.
பின்னர் இருவரும் சேர்ந்து புண்டலிக் இல்லத்துக்கு வருகின்றனர்.
புண்டலிக் தன் பெற்றோருக்கு பணிவிடை செய்து கொண்டிருக்கும்போது விஷ்ணு (கிருஷ்ணர்) கதவை தட்டுகிறார். வந்திருப்பது கடவுள் தான் என்பது புண்டலிக்குக்கு தெரிந்திருந்த போதும் தன் பெற்றோருக்கு சேவை செய்வதே முதல் கடமை பின்னர்தான் விருந்தினரை கவனிக்கவேண்டும் என்று விரும்புகிறான். புண்டலிக் ஒரு செங்கல்லை தூக்கிப்போட்டு அதன் மீது நின்று கொண்டிருக்குமாறும் தான் தன் பெற்றோருக்கு பணிவிடை செய்து முடித்துவிட்டு வருவதாகவும் கூறுகிறான். அது மழைக்காலம் ஆதலால் வெளியே ஈரமாகவும் சேறும் சகதியுமாகவும் இருந்தது. விஷ்ணு செங்கல்லின் மீது நின்றிருந்தால் அவர் கால்கள் சுத்தமாகவும் உலர்ந்தும் இருக்கும் என்பதற்காகவே புண்டலிக் செங்கல்லை தூக்கிப் போட்டான்.
தன் கால்கள் நனையாமல் இருப்பதற்காக புண்டலிக் செங்கலைப் போட்டது பகவானை மிகவும் ஈர்த்தது. விஷ்ணு புண்டலிக் தன் சேவைகளை முடித்துவிட்டு வரும் வரை காத்திருந்தார். புண்டலிக் தன் சேவைகளை முடித்துவிட்டு வந்து விஷ்ணுவிடம் காத்திருக்க வைத்தமைக்காக மன்னிப்பு கோரினான். புண்டலிக் தன் பெற்றோர் மேல் வைத்திருந்த ஆழ்ந்த அன்பை கண்டு மிகவும் மகிழ்ந்து அவனுக்கு ஒரு வரம் அளித்தார். புண்டலிக் பகவானை பூமியிலேயே இருந்து அவருடைய பக்தைகளுக்கு அருள் புரியுமாறு கேட்டுக்கொண்டான்.
வித்தோபா (கல்லின் மேல் நிற்கும் கடவுள் என்று பொருள்) என்ற பெயரில் அங்கு காட்சியளிக்க ஒப்புக்கொண்டார்.
புண்டலிக்கும் விஷ்ணுவும் சந்தித்த அந்த இடத்தில் பந்தர்பூர் பாண்டுரங்கர் கோயில் கட்டப்பட்டது. இவ்வாறு தான் பாண்டுரங்கனும் ருக்மணியும் அங்கு எழுந்தருளினர்.
பந்தர்பூர் பாண்டுரங்க விட்டலா கோயிலின் முக்கிய நுழைவாயில் சந்திரபாகா (பீமா) நதிக்கரையை நோக்கி அமைந்துள்ளது. பாண்டுரங்கனின் முக தரிசனத்தை இந்த நுழைவாயில் வழியாக சென்றால் (சற்று தூரத்திலிருந்து) வரிசையில் நிற்காமல் காணலாம்.
பாத தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து தரிசிக்க வேண்டும். ஆண்டவனின் பாதத்தை உங்கள் கைகளால் தொட்டு தரிசிக்கலாம். விழாக்காலங்களில் நீண்ட நேரம் காத்திருக்க ( வரிசை கோயிலுக்கு எதிரில் இருக்கும் ஏழு மாடி வரை கூட நீண்டிருக்கும்.) வேண்டியிருக்கும்.
உங்களிடம் இணைய வசதி இருந்தால் மூன்று நாட்களுக்கு முன் உங்களுக்கு வசதிபடும் நேரத்தை பதிவு (முற்றிலும் இலவசம்) செய்து அந்த நேரத்தில் சென்று தரிசிக்கலாம்.
No comments:
Post a Comment